இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியின் 2வது இனிங்சுக்காக துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியின் 2வது இனிங்சில் விளையாடி வருகிறது இந்திய அணி.
இந்திய அணி முதல் இனிங்சுக்காக பெற்றுக் கொண்ட 78 ஓட்டங்களுக்கு பதிலளித்து ஆடிய இங்கிலாந்து அணி 1வது இனிங்சில் 432 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்திருந்தது.
இதையடுத்து 354 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் நேற்று 2-வது இனிங்சுக்காக களமிறங்கியது இந்திய அணி.ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான கே.எல்.ராகுல் 8 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதன் பின்னர் ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா - புஜாரா இணை 2வது விக்கெட்டுக்காக 82 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்த நிலையில் ரோகித் சர்மா 59 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இந்நிலையில் ஜோடி சேர்ந்த புஜாரா - கோலி இருவரும் மேலதிகமாக விக்கெட் எதனையும் இழக்காது நிதானமாக துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.
நேற்றைய 3வது நாள் ஆட்ட நேர நிறைவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 215 ஓட்டங்களை எடுத்துள்ளது.
புஜாரா - 91, கோலி - 45 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது உள்ளனர்.
தற்போதைய நிலையில் இந்திய அணியானது இனிங்ஸ் தோல்வியை தவிர்க்க 139 ஓட்டங்கள் எடுக்க வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, புதிது
Tags: இங்கிலாந்து, இந்தியா